ஈரோடு, மே 24- ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுபாலம் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் குண்டும், குழியுமான சாலையை மேம்படுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது. ஈரோடு காளைமாடு சிலை அருகே கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம் கீழ் சாலை உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் கரூர், மதுரை திருச்சி, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய பேருந்துகள், வாகனங்கள் மற்றும் முத்தூர், பூந்துறை பகுதியில் இருந்த வரக்கூடிய வாகனங்கள் ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த சாலை உள்ளது. இங்கு எப்போதும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. அதேநேரம், இந்த சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் குண்டும், குழியுமான சாலை மற்றும் இந்த பகுதியை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது, கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம் பகுதியை மேம்படுத்தும் பணிக்காக ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். பணி தொடங்கும் போது இந்த வழியாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வந்து செல்லலாம். ஆனால், பேருந்து மற்றும் லாரிகள் மாற்று வழி பாதையில் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, முத்தூர் சாலை, கரூர் சாலையில் இருந்து வரும் பேருந்துகள், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் வண்டிப்பாளையம் பழைய ரயில்வே சாலை வழியாக, காளைமாடு சிலை வழியாக ஈரோடு பேருந்து நிலையத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பூந்துறை சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சாஸ்திரி நகர், சென்னிமலை ரோடு வழியாக பேருந்து நிலையத்திற்கு செல்ல மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பணிகள் தொடங்கிய 60 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.