நாமக்கல், ஜன. 9- விபத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் குடும்பத்திற்கு இழப்பு காப்பீட்டை இன்சூரன்ஸ் நிறுவனம் தர மறுத்த நிலையில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் தலையிட்டு உயிரிழப்பு காப்பீடாக ரூ.6 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் அருகே உள்ள எருமப்பட்டியைச் சேர்ந்த குமார் (56) என்பவர், சொந்தமாக லாரி வைத்து இயக்கி வந்தார். இவர், கடந்த 2020 அக்டோபர் மாதம் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் நாமக்கல் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினராக இருப்பதால், அச்சங்கத்தின் சார்பில், நியூ இந்தியா அஸ்சுரன்ஸ் நிறுவனத்தில் குருப் இன்சூரன்ஸ் எடுத்திருந்தது. குரூப் இன்சூரன்ஸ் திட்டப்படி இறந்தவரின் மனைவி தேவகி, மகன் அமர்நாத், மகள் கோகிலா ஆகியோருக்கு காப்பீட்டு தொகை ரூ.10 லட்சம் வழங்குமாறு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், விபத்தில் உயிரிழந்த குமார், கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கு மட்டுமே உரிமம் உள்ளது. இருசக்கர வாகனத்தின் உரிமம் இல்லாமல் அவர் இயக்கி உள்ளதால், இன்சூரன்ஸ் தொகையை கொடுக்க முடியாது என இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துவிட்டது. இதனையடுத்து, இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று தேவகி, அமர்நாத், கோகிலா ஆகியோர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இவ்வழக்கு விசாரணையில், லாரி உரிமையாளர்கள் சங்கத்துக்கு வழங்கிய குரூப் இன்சூரன்ஸ் விதியின்படி, சட்டத்தை மீறி செயல்பட்டு உயிரிழந்தால் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட மாட்டாது என நீதிமன்றத்தில் வாதிட்டது. விசாரணை முடிவடைந்த நிலையில் செவ்வாயன்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வீ. ராமராஜ் மற்றும் உறுப்பினர் ஆர்.ரமோலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். இதில், இருசக்கர வாகன உரிமம் இல்லாமல் குமார் ஓட்டியுள்ளார். தலைக்கவசம் அணியாமல் சட்டத்தை மீறி செயல்படும் போது உயிரிழந்தால் மட்டுமே இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படாது என்று உள்ளது. இதனால் இன்சூரன்ஸ் நிறுவனம் உயிரிழந்தவரின் வாரிசுகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை வழங்காதது சேவை குறைபாடு என்றும், இன்சூரன்ஸ் தொகை ரூ.10 லட்சம் என்றாலும், இறந்து போனவர் சட்டத்தை மீறி செயல்பட்டதால் இறப்பில் அவருக்கும் பங்கு உள்ளதாக கருதி, இன்சூரன்ஸ் நிறுவனம் பாதி இன்சூரன்ஸ் தொகை ரூ.5 லட்சத்தையும், சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூபாய் ஒரு லட்சம் என மொத்தம் ரூ.6 லட்சத்தை உயிரிழந்தவரின் வாரிசு களுக்கு, நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும். தவறினால் அக்டோபர் 2020 முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை ஆண் டுக்கு 9 சதவிகித வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.