districts

img

மலைப்பாதையில் காட்டுத்தீ

உதகை, மார்ச் 26- நடுவட்டம் மலைப்பாதையில் காட்டுத்தீயால் அரிய வகை  மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின. கூடலூரில் இருந்து உதகைக்கு செல்லும் தேசிய நெடுஞ் சாலையில் நடுவட்டம் பேரூராட்சி உள்ளது. இதை சுற்றிலும்  அடர்ந்த வனங்கள் உள்ளது. இந்நிலையில். சனியன்று மாலை  5 மணிக்கு மலைப்பாதையில் உள்ள தெய்வ மலை மற்றும்  தவள மலை வனப்பகுதியில் பயங்கர காட்டு தீ பரவியது. இதனைக்கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், உதகை வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனால் சம்பவ  இடத்துக்கு வனத்துறையினர் வராததால் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. இதனிடையே தெய்வ மலை கிராம மக்கள் அச்சமடைந்தனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வன ஊழியர் கள் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், அரிய வகை மூலிகைகள், தாவரங்கள் மற்றும்  சிறு வன உயிரினங்கள் தீயில் எரிந்து சாம்பலானது. காட்டுத்  தீயால் சேதமடைந்த வனத்தின் பரப்பளவு குறித்த தகவல்  எதுவும் தெரியவில்லை.