districts

img

கோயில் நிலத்தை ஏலம் விட பொதுமக்கள் எதிர்ப்பு

நாமக்கல், செப்.28- பள்ளிபாளையம் அருகே கோயில் நிலத்தை ஏலம் விட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே, ஆவத்திபாளையத்தில் கல்யாண பெருமாள் கோயில் பழமை வாய்ந்தாகும்.   இந்து சமய அறநிலைத்துறை கட்டுபாட்டில் இக்கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை சிலர் தனியார் ஆக்கிரமித்துள்ளனர். இக்கோயிலுக்கு அருகில் உள்ள சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை தனியார் ஆக்கிரமித்து சட்டவிரோதமான தொழிலை செய்து வந்தனர். இதையடுத்து,  அப்பகுதி மக்கள், நீதிமன்றத்தை அணுகி அந்த நிலத்தை மீட்டு, மீண்டும் இந்து சமய அறநிலைத்துறையின் வசம் ஒப்படைத்தனர். தற்பொழுது கோயில் விழா போன்ற காலங்களில் அந்த இடத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.  இந்நிலையில், இந்து சமய அறநிலைத்துறை சார்பில், தனியாருக்கு ஏலம் விடுவதாக தகவலறிந்த பொதுமக்கள் உடனடியாக அந்த இடத்தை ஏலம் விடக்கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.   திருவிழாக் காலங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவைப்படுவதால், தனியாருக்கு ஏலம் விட்டால் பொதுமக்களை அனுமதிக்க மாட்டார்கள். மேலும் பொங்கல் வைக்கவும், திருவிழா நிகழ்ச்சிகள் நடத்தவும் போதிய இடவசதி இல்லாமல் பொதுமக்களுக்கு அவதி ஏற்படும் எனக் கூறி ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மீண்டும் இந்து சமய அறநிலைத்துறைக்கு ஒப்படைக்க மறுத்த தனியார் நிர்வாகமே, தற்பொழுது ஏலம் எடுக்க முன் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குமாரபாளையம் இந்து சமய அறநிலைத்துறை அலுவலர் வடிவுக்கரசியின் முன்னிலையில், ஏலத்தில் கலந்து கொள்ள ஒருவர் மட்டுமே கலந்து கொண்டார். இதையடுத்து, மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.  பொதுமக்கள், கோயில் நிலத்தை ஏலம் விடக்கூடாது. அப்படி ஏலம் விட்டால், பொதுமக்களும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டுமென மனு அளித்தனர். இதன் காரணமாக பள்ளிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில், போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.