கோவை, டிச.17- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. பொது இன்சூரன்ஸ் ஓய்வூதி யம் பெறுவோர் சங்கத்தின் கோவை மண்டலத்தின் வெள்ளி விழா வருட 14 ஆவது பொது மாநாடு சனியன்று காந்திபுரத்திலுள்ள கமலம் துரைசாமி ஹாலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் கோவை மண்டல தலைவர் சி.கோபால் தலைமை வகித்தார். இணைச்செயலாளர் கே.நந்தகுமார் வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் அமைப்பு செயலாளர் எஸ்.வி.ஷங்கர் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். பொதுச்செயலாளர் ஆர்.சங்கர் நாராயண் அறிக்கையை முன்வைத்தார். இதில், அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர்கள் ஆர்.நரசிம்மன், எச்.வேணுகோபால், பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் மதுரை மண்டல துணைத்தலைவர் ஆர்.ராஜேந்திரன், சென்னை மண்டல பொது காப்பீட்டு ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் ஆர்.வேணுகோபால், முன்னாள் தலைவர் பி.குருசாமி, பி.வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் சென்னை மண்டல துணைத்தலைவர் ஜே.குருமூர்த்தி சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டில், மூத்த குடிமக்களுக்கான பென்சன் மற்றும் இதர திட்டங்களை ஒன்றிய அரசு பறிக்கக்கூடாது. ஏற்றுக்கொள்ளப்பட்ட 30 சதவிகித குடும்ப ஓய்வூதிய உயர்வுக்கு உடனடியாக அரசு அரசானை வெளியிட வேண்டும். பொது பென்சன் திட்டத்தில் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் இணைக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தினை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் கோவை மண்டல தலைவராக பி.குருசாமி, பொதுச்செயலாளராக ஆர்.சங்கர் நாராயண் உட்பட 24 பேர் கொண்ட மண்டலக்குழு தேர்வு செய்யப்பட்டது. முடிவில், எஸ்.லட்சுமணன் நன்றி கூறினார்.