பொள்ளாச்சி, மே 11- இலங்கை நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு உதவும் வகையில், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு பொள்ளாச்சியைச் சேர்ந்த பள்ளி சிறுமி நிதி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு மக்கள் உதவ வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பை கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வரும் நூரி பாத்திமா என்ற சிறுமி தொலைக்காட்சியில் கண்டுள்ளார். இதனையடுத்து இலங்கை மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என நினைத்து தனது உண்டியலில் உள்ள சேமிப்பு பணத்தை இலங்கைக்கு கொடுக்க வேண்டும் என்று தந்தை இக்பாலிடம் கூறியுள்ளார். இதைக்கேட்ட இக்பால் உடனடியாக சிறுமியின் உண்டியல் சேமிப்பான ரூ.1073 பணத்திற்கான காசோலையை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பிடக்கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.