மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் உருவப்படத்திற்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத் உள்ளிட்ட தலைவர்கள் செவ்வணக்கம் செலுத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவுக்கு அரசியல் தலைமைக் குழு, தனது ஆழ்ந்த துயரத்தை தெரிவித்துக் கொள்கிறது. புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடுமையான நுரையீரல் நோய்த்தொற்றுக்கு எதிராக போராடிய அவர் காலமானார். அவருக்கு வயது 72. தோழர் சீத்தாராம் யெச்சூரி நமது கட்சியின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராகவும், இடதுசாரி இயக்கத்தின் சிறந்த தலைவராகவும், மக்கள் அறிந்த மார்க்சிய சித்தாந்தவாதியாகவும் இருந்தார். மாபெரும் மாணவர் தலைவர் அவர் தனது இளங்கலை மற்றும் முதுகலை பொருளாதாரப் பட்டங்களில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர் ஆவார். 1974ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் இயக்கத்தில் சேர்ந்து, இந்திய மாணவர் சங்கத்தின் தலைவரானார். இரண்டு ஆண்டுகளுக்குள் மூன்று முறை ஜேஎன்யு மாணவர் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984 முதல் 1986 வரை இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவராக இருந்து, மாணவர் சங்கத்தினை அகில இந்திய சக்தியாக உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். சீத்தாராம் யெச்சூரி 1975 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். தனது அரசியல் செயல்பாடுகளுக்காக நெருக்கடி நிலையின் போது கைது செய்யப்பட்டார். 1985ல் நடைபெற்ற 12வது அகில இந்திய மாநாட்டில் கட்சியின் மத்தியக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதி வரை செயல்பட்டு வந்தார். 1989ல் மத்திய செயற்குழுவிற்கும், 1992ல் நடைபெற்ற கட்சியின் 14வது மாநாட்டில் அரசியல் தலைமைக் குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015ல் நடைபெற்ற 21வது மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதி மூச்சு வரை அப்பொறுப்பில் தொடர்ந்தார். தத்துவத் துறையில் தனித்துவமான பங்கு கட்சி மையத்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக, கட்சியின் தலைமைக் குழுவின் ஒரு பகுதியாக, கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளை வகுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். தத்துவத் துறையில் சீத்தாராம் தனித்துவமான பங்கை வகித்தார். சோசலிசம் எதிர்கொண்ட பின்னடைவுகளைத் தொடர்ந்து கட்சியின் கருத்தியல் நிலைப்பாடுகளை உருவாக்கிய 14வது மாநாட்டில் சில தத்துவார்த்த பிரச்சனைகள் குறித்த தீர்மானத்தை கட்சி ஏற்றுக்கொண்டது. இந்த தீர்மானத்தை தோழர் சீத்தாராம் மாநாட்டில் சமர்ப்பித்தார். அதன் பிறகு, 2012ல் நடைபெற்ற கட்சியின் 20வது மாநாட்டில் ஏற்றுக்கொண்ட தத்துவார்த்த நிலைப்பாடுகளை புதுப்பித்த தீர்மானத்தை முன்மொழிந்த முக்கியமானவராக இருந்தார். கட்சி மத்தியக் குழுவின் சர்வதேசத் துறையின் தலைவராக, கம்யூனிஸ்ட் மற்றும் முற்போக்கு சக்திகளின் பல்வேறு சர்வதேச மன்றங்களில் பங்கேற்று, சோசலிச நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தினார் - ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களுடன் ஒருமைப்பாட்டை வளர்த்தார். சிறந்த எழுத்தாளர் இருபதாண்டுகளுக்கும் மேலாக கட்சியின் வார இதழான பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் ஆசிரியராக இருந்தார். அவர் ஒரு திறன் மிக்க எழுத்தாளர். தத்துவத் துறையில் அவரது மற்றொரு முக்கிய பங்களிப்பு இந்துத்துவா பற்றிய அவரது விமர்சனம் ஆகும். அவர் எழுதிய - ‘இந்து ராஷ்ட்ரா என்றால் என்ன?’ மற்றும் ‘வகுப்புவாதம் எதிர் மதச்சார்பின்மை’ ஆகிய புத்தகங்களில் அந்த விமர்சனங்கள் வெளிப்பட்டன. 2005 முதல் 2017 வரை இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். சிபிஐ(எம்) குழுவின் தலைவராக பணியாற்றி சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டார். 2017ல் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்காக விருது பெற்றார். அண்மைய காலத்தில், மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் பரந்த ஒற்றுமையை உருவாக்குவதற்கு சீத்தாராம் யெச்சூரி தனது நேரத்தையும் ஆற்றலையும் அர்ப்பணித்தார். இது ‘இந்தியா கூட்டணி’ எனும் வடிவத்தை எடுத்தது. ஐக்கிய முன்னணி அரசாங்கம் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஆகிய இரண்டு காலகட்டங்களிலும், இந்த கூட்டணிகளை ஆதரித்த வாதங்களை சி.பி.ஐ(எம்) சார்பில் முன்வைப்பவராக சீத்தாராம் இருந்தார். அவரது இனிமையான குணம் காரணமாக, அரசியலின் அனைத்துப் பிரிவுகளிலும் மற்றும் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் அவருக்கு பரந்த நண்பர்கள் வட்டம் இருந்தது. அவரது அரசியல் நேர்மை மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவராலும் மதிக்கப்பட்டார். நமது தேசிய அரசியலில் இந்த முக்கியமான தருணத்தில் சீத்தாராம் யெச்சூரியின் அகால மரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு பேரிடியாகும். இடதுசாரி, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஒரு பெரும் இழப்பாகும். நமது அன்புக்குரிய தோழருக்கு அரசியல் தலைமைக்குழு மரியாதை செலுத்துகிறது. அவரது நினைவாக செங்கொடியை தாழ்த்துகிறது. சுரண்டலற்ற சமூகத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்து, கடினமாக உழைக்கவும், ஒருங்கிணைந்து நிற்கவும் கட்சி அணிகளை அரசியல் தலைமைக்குழு கேட்டுக் கொள்கிறது. இதுவே அவருக்கு செலுத்தக்கூடிய சிறந்த அஞ்சலியாகும். அரசியல் தலைமைக் குழுவின் சார்பில் அவரது இணையர் சீமா, மகள் அகிலா, மகன் டானிஷ், சகோதரர் சங்கர் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.