மேற்கு ஆஸ்திரேலியாவில் நீருக்கடியில் வளரும் உலகின் மிகப்பெரிய தாவரத்தை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள ஷார்க் விரிகுடாவில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாவரம் சுமார் 200 சதுர கிமீ பரப்பளவில் விரிந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது விரிந்திருக்கும் மேற்பரப்பு கிளாஸ்கோ நகரத்தை விட சற்றே பெரியது. மன்ஹாட்டன் தீவை விட மூன்று மடங்கு பெரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்தச் செடியை பார்க்கும் போது அது ஒரு பெரிய கடல் புல்வெளி என்று நம்பியதாகவும் , ஆனால் அது ஒரு விதையில் இருந்து பரவிய தாவரம் என அறிவியல் சோதனையில் தாங்கள் கண்டறிந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தத் தாவரத்தின் வளர்ச்சியை பார்த்தால் இந்த தாவரம் சுமார் 4,500 ஆண்டுகளாக வளர்ந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.