districts

அரசுப் பள்ளி நிகழ்ச்சியா? அரசியல் நிகழ்ச்சியா? பூலுவபட்டி பள்ளி மாணவர்களின் பெற்றோர் வேதனை

திருப்பூர், மார்ச் 23- பூலுவப்பட்டி மாநகராட்சி துவக்கப் பள்ளியின் தனி இணைய செயலி வெளியிட்டு நிகழ்ச்சியில், பள்ளி வளர்ச்சிக்கு துணை நின்ற பெற்றோர் சங்கத்தினரை மேடையில் அமர வைக்காமல், ஆளும் கட்சியினர் பலர் அமர வைக்கப்பட்டிருந்தது பெற்றோர்களிடையே முகம் சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.    திருப்பூர் பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப் பள்ளி பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களின் ஒருங்கிணைப்பால் இன்று 900 மாணவர்களை கொண்ட பள்ளியாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியின் சார்பில் புதனன்று தனியார் பள்ளிகளுக்கெல்லாம் முன்மாதிரியாக தனி இணைய செயலி ஒன்றை உருவாக்கி வெளியிட்டனர். இவ்விழாவில் மேயர் தினேஷ்குமார் கலந்து கொண்டு செயலியை வெளியிட்டார். இந்நிகழ்வில் பள்ளி வளர்ச்சிக்கு துணை நின்ற பெற்றோர் சங்கத்தினரை மேடையில் அமர வைக்காமல், ஆளும் கட்சியினர் பலர் அமர வைக்கப்பட்டிருந்தனர்.  இதைப் பார்த்து பெற்றோர்கள் பலர் முகம் சுழித்தனர். மேடையில் அமர வைக்கப்பட்ட ஆளும் கட்சி பிரமுகர்கள் இதுவரை பள்ளி வளர்ச்சிக்கு எந்த உதவியும் செய்யவில்லை, ஆனால் பள்ளி வளர்ச்சிக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் பாடுபட்டு வரும் பெற்றோருக்கு இடம் தராமல் ஒதுக்கி வைத்தது வேதனையாக உள்ளது என்று கூறினர்.  புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மேயர் தினேஷ்குமார் வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை தருவோம் என கூறி வருவது நம்பிக்கை அளிக்கிறது. ஆனால் இந்த பள்ளியில் நடைபெற்ற செயல் அந்த நம்பிக்கைக்கு ஊறு விளைவிப்பதாக உள்ளது. எனவே, இது போன்ற அரசுப் பள்ளி நிகழ்ச்சியை ஆளும் கட்சி நிகழ்ச்சியாக மாற்றி விடாமல் மேயர் தினேஷ்குமார் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் பெற்றோர்கள் எதிர்பார்ப்பை தெரிவித்தனர்.