கோவை அருகே வீட்டில் தொட்டி அமைக்க குழி தோண்டிய போது முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வருவாய்த்துறை மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள முத்து கவுண்டன் புதூரில் பொன்னுச்சாமி என்பவர் தனது வீட்டில் செப்டிக் டேங்க் அமைக்க குழி தோண்டிய போது பழங்கால முதுமக்கள் தாழி போன்ற மண் பானை தெரிந்துள்ளது. அதன் மீது ஒரு பலகைகள் வைத்து மூடப்பட்டிருந்தது. அதை திறந்து பார்த்த பொழுது அதில் சில எலும்புகள் கிடந்தது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் உடனடியாக இது பற்றி வருவாய்த்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த வருவாய் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் முதுமக்கள் தாழியை கைப்பற்றி விவரங்களை சேகரித்தனர். தொடர்ந்து ஆய்வுக்காக முதுமக்கள் தாழியை கோவையில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.