அவிநாசி, பிப்.10- அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வியாழனன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்துணவு அமைப்பாளர் ஜோதியின் குடும்ப புகைப்படத்தை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து திருடி சமூக வலைதளத்தில் பதிவிட்ட இரண்டு நபர்கள் மீதும், அலுவலக கோப்புகளை தனிநபர்களுக்கு மறைமுகமாக வழங்கி ஆதரவு கொடுத்த அரசு அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உத்தரவிட வேண்டும். பெண்கள் பாதுகாப்பு சட்டத்தினை மதிக்காமல் காலம் தாழ்த்தி வரும் அவிநாசி ஒன்றிய நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு விஜயலட்சுமி தலைமை வகித்தார். நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி ராமன் துவக்க உரையாற்றினார். அமைப்பின் மாநிலச் செயலாளர் சக்தி விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி வாழ்த்தி பேசினார். மேலும், இந்த போராட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் கல்யாணராமன், ஓய்வூதியர் சங்க செயலாளர் சாமிநாதன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைதொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.