உதகை மலர்க்கண்காட்சியை துவக்கி வைக்க நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வியாழனன்று குன்னூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நீலகிரி என்றால் நீல நிறமான மலை என்று பொருள். நீலகிரி என்ற பெயர் குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ளது. நீலகிரி மலையில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது. குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். நீலகிரி மலைகள் கர்நாடக பீடபூமியிலிருந்து வடக்கே மாயாறு நதியால் பிரிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மலைகள் மூன்று தேசிய பூங்காக்களை எல்லைகளாக கொண்டுள்ளது. 321 சதுர கி.மீ பரப்பளவில் கேரளம், கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்கள் சந்திக்கும் எல்லையின் வடக்கு பகுதியில் முதுமலை தேசியப் பூங்கா அமைந்துள்ளது. முக்கூர்த்தி தேசியப் பூங்கா 78.5 சதுர கி.மீ பரப்பளவில் கேரளத்தில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதில் சோலைக்காடுகள், நீலகிரி வரையாடுகளின் வாழ்விடங்கள் உள்ளன. இதேபோல், அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா தெற்கே அந்த இரண்டு பூங்காக்களுடன் ஒட்டி அமைந்துள்ளது. இது 89.52 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது.
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், உயிர்க்கோள் காப்பகமாக ஐக்கிய நாடுகள் சபை UNESCO அறிவித்துள்ளது. நீலகிரிக்கு பெருமை சேர்க்கிறது. இது இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகமாகும். நீலகிரி மலைகளின் உயரமான பகுதிகளில் தொல்பழங்காலங்களிலிருந்து மக்கள் வசித்து வருகின்றனர். இது அகழ்வாராய்ச்சி யாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஏராளமான தொல்பொருட்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்திலிருந்து கண்டறியப்பட்ட முக்கியமான தொகுப்பை பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காணலாம். நீலகிரி மலையானது மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் சேரும் இடத்தில் இது அமைந்துள்ளது. இம்மலையில் ஒரு சதுர மைல் கூடச் சமநிலத்தைக் காண முடியாது. எங்கு பார்த்தாலும் மேடும் பள்ளங்களுமே தென்படும். இது சமவெளியிலிருந்து செங்குத்தாக உயர்ந்துள்ளது. இம்மலையின் மேற்குச் சரிவிலும், அவுட்டர் லானி பள்ளத்தாக்கிற்கு மேலும், தென்சரிவிலும், சுவர்களைப் போன்ற, நூற்றுக் கணக்கான அடிகள் உயரமுள்ள பாறைகள் நிறைந்துள்ளன. மரங்கள்கூட வேர் ஊன்ற முடியாத அளவு அவைகள் செங்குத்தாக உள்ளன. மற்ற இடங்களில் உள்ள சரிவுகளிளெல்லாம், அடர்ந்த காடுகள் நிறைந்துள்ளன. நீலகிரி மலையானது நடுவில் தென்வடலாகச் செல்லும் உயர்ந்த ஒரு தொடரால் கிழக்குப் பகுதியாகவும், மேற்குப் பகுதியாகவும் பிரிக்கப்படுகிறது. அத்தொடரில் உள்ள உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா ஆகும். தொட்டபெட்டா என்றால் ‘பெருமலை’ என்று பொருள். இச்சிகரம் உதகமண்டலத்திற்குக் கிழக்கே அமைந்துள்ளது.