உடுமலை அருகே பெருங்கற்காலப் பாறைகளில் ராஜாக்கள் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கொழுமம் வனச்சரகப் பகுதி உள்ளது. இங்கு, கடையேழு வள்ளல்களுக்கு பிறகு வாழ்ந்த குமண மன்னன் குறித்தான ஆய்வுகளை நேரடி களப்பயணம் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் கொழுமத்திற்கும், இரட்டையம்பாடிக்கும் இடையில் உள்ள கரட்டுப்பகுதியில் உள்ள பெருங்கற்காலப் பாறைகளை ஆய்வு செய்துவருகிறார்கள். இந்த பாறைகள் மலைப்பகுதியில் நிலத்திலிருந்து 15 அடி உயரத்திலும், 25 அடி அகலத்திலும் மிகப்பிரமாண்டமாக அமைந்துள்ளது. பாறையின் அடுக்குகள் பல்வேறு படிம நிலைகளை விளக்குவதாகவும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டவையாக இருப்பதாகவும் தெரிய வருகிறது. இது குறித்து தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி தெரிவிக்கையில் குமணனைப் பற்றி சங்க இலக்கியப் பாடல்கள் கூறும் போது முதிரை மலைத் தலைவன், முதிரவேள் குமணா என்ற சொற்கள் வந்ததையொட்டிஆய்வு செய்யும் போது முதிரை என்றால் வழக்குச்சொல் நாம் உணவிற்குப் பயன்படுத்தும் கொள்ளு எனும் தானியப்பொருளே, மலையாளத்திலும் தமிழிலும் முதிரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மலைப்பகுதியில் மானாவாரியாக ஏராளமான முதிரச்; (கொள்ளு) செடிகள் ஆங்காங்கே நிரம்ப விளைந்திருக்கின்றன. இவ்விடத்தில் கடந்த 2015 வரையிலும் மக்கள் வாழ்ந்ததாகக் கூறுகின்றனர். இவ்விடத்தை பாண்டிய ராஜா மடம் என்றும் அழைக்கின்றனர். பாண்டிய ராஜா என்ற அரசன் இல்லாவிட்டாலும் மக்கள் வழக்காறுகளில் ராஜாக்கள் இருந்ததையும், இங்கு ராஜாக்கள் ஆட்சி செய்ததையும் நமக்கு உணர்த்துகிறது. மேலும், ஐவர் மலையில் குவணச்சேரி என்ற கல்வெட்டு எழுத்துக்களும் இருப்பதை உறுதிபடுத்துகிறது என்றார். மேலும், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தெரிவிக்கையில் இந்த முதிரை மலையில் மலையும் காடும் இணைந்திருப்பதும், கொழுமத்திலிருந்து பார்த்தால் மலை முகடு மட்டும் தெரிவதும், சுமார் 100 மீட்டர் மலையேறிப்பார்த்தால் அரை கிலோ மீட்டர் இடைவெளியில் 5 கி,மீ. நீளத்தில் நீண்ட சமவெளிப்பகுதி இருப்பதும், அங்கு ஏராளமான கொள்ளுச்செடிகளும் உள்ளன. இதன் அருகில் வசிக்கும் விவசாயப்பெருமக்கள் இதனைக் கொல்லன் கரடு எனவும். இங்கு பழங்காலத்தில் மக்கள் வசித்ததையும் அவர்களின் வாரிசுகள் அருகிலுள்ள ஊர்களுக்கு இடம்பெயர்ந்து போனது பற்றியும் நினைவு கூறுகின்றனர். உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் சுமார் மூன்றாண்டு கால களப்பணிக்குப் பின்னர் இந்த இடத்தைக் கண்டறிந்ததாகவும், இவ்விடத்தில் மக்கள் வசித்தமைக்கான சான்றுகளையும், மக்கள் வழக்காடுகளில் வழங்கப்படும் ராஜாக்கள் குறித்த பாண்டிய ராஜா மடம் எனும் பெயரில் பெருங்கற்காலப் பாறை இருப்பதையும் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், இப்பகுதியில் தொடர்ந்து கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த கள ஆய்வில் தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி, வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் மதியழகன், வி.கே.சிவகுமார், அருட்செல்வன், தமிழாசிரியர் சிற்பி கணேசன், பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் விஜயலட்சுமி. ஜிவிஜி வரலாற்றுத் துறை மாணவி ச.க.அறிவரசி ஆகியோரும் நேரடி களப்பயணத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.