கோவை மதுக்கரை வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பள்ளி இடை நின்ற மாணவர்களைக் கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்துப் பேசி படிப்பைத் தொடர அறிவுறுத்தினார்.
கோவை மாவட்டம், மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து, பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுகளை மேற்கொண்டு, அப்பகுதி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அப்போது மதுக்கரை வட்டத்தில், 9 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்குப் பள்ளிச் செல்லாமல் படிப்பைப் பாதியில் நிறுத்திய 4 மாணவர்களைக் கோவை ஆட்சியர் கிராந்திகுமார் நேரில் சந்தித்து, படிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்து மீண்டும் படிக்க அறிவுறுத்தினார். இதையடுத்து 4 மாணவர்களும் மேல் படிப்பை தொடர்வதை உறுதி செய்தனர்.
தொடர்ந்து, மானிய நிதிக் குழு ஒதுக்கீட்டின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மதுக்கரை நகராட்சி அலுவலக கட்டுமான பணிகள், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் எரிவாயு தகன மேடை கட்டடப் பணிகள், நுண் உர மையம், மதுக்கரை மார்கெட்டில் ரூ.1.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக கட்டடப் பணிகள் ஆகியவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார்.