என்.டி.சி மில்களை குறிப்பிட்ட காலத்திற்குள் திறக்காவிட்டால், குஜராத்தில் உள்ள பிரதமர் மோடி பிறந்த வீட்டின் முன்பு் அமர்ந்து வீடு திரும்பா போராட்டத்தில் என்.டி.சி தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என கோவையில் சேவ் என்டிசி அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள என்.டி.சி மில்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட நிலையில், தற்போது வரை இயக்கப்படாமல் இருந்து வருகிறது. மேலும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவிகித ஊதியமும் முறையாக வழங்கப்படவில்லை. இதையடுத்து நாடு முழுவதிலும் உள்ள 23 என்.டி.சி மில்களில் பணியாற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேவ் என்.டி.சி என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு சார்பில் கோவையில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மஹாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சரும் சேவ் என்டிசி அமைப்பின் அகில இந்திய தலைவருமான சச்சின் அகார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக என்.டி.சி பஞ்சாலைகளை உடனே திறக்க வலியுறுத்தியும், ஆலையின் சொத்துக்களை விற்பனை செய்வதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் அகார், ஆண்டுக்கு இரண்டு கோடிப்பேருக்கு வேலை தருவோம் என்கிற வாக்குறுதியை அளித்து ஆட்சிக்கு வந்தார் பிரதமர் மோடி. ஆனால் அரியனையில் ஏறிய பிறகு இருக்கிற வேலையும் பறிக்கிற வேலை செய்து வருகிறார்.
மேக் இன் இண்டியா என மேடை தோரும் முழங்குகிறார். ஆனால் நடைமுறையில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான என்டிசி பஞ்சாலைகளைக்கூட இயக்க மறுக்கிறார். வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அரசு ஆலைகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மில்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட்டு, மில்களை இயக்க அரசு முன்வராவிட்டால், பிரதமர் மோடியின் அகமதாபாத் இல்லத்தில் வீடு திரும்பா காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.
கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறும் போது, கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக வருகிற குடியரசு தினத்தன்று தேசிய கொடி ஏற்றிய பின்பு தொழிலாளர்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், மில்களின் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து ஆலையினுள் அமர்ந்து வீடு திரும்பா போராட்டமும், பின்னர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்போது பிரதமரை சந்தித்து முறையிடுவது உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளோம். இதற்கெல்லாம் செவிசாய்க்காவிட்டால் சச்சின் கூறியதை போல் பிரதமர் இல்லம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சேவ் என்டிசி ஒருங்கினைப்பாளர் சி.பத்மநாபன், தென்னக ஒருங்கிணைப்பாளர் ராஜாமணி உள்ளிட்ட அனைத்து என்டிசி தொழிற்சங்க தலைவர்கள் பஙலகேற்றனர்.