districts

img

இருப்பு பாதை மீது மண் சரிவு: மேட்டுப்பாளையம்-உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து ரத்து!

உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் பெரிதும் கவரும் இம்மலை ரயில் மழை காலங்களில் இதன் பாதையில் ஏற்படும் மண் சரிவுகளால் சரிவர இயங்க இயலாமல் அடிக்கடி தடைபட்டு நிற்கிறது..

இன்று அதிகாலை மலை ரயில் கடந்து செல்லும் மலைப்பாதையில் பெய்த கனமழை காரணமாக அடர்லி மற்றும் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு மண் சரிவு ஏற்பட்டு தண்டவாள பாதை புதைந்து போனதோடு பாறைகளும்,  மரங்களும் சாய்ந்தன..இதனால் இன்று காலை வழக்கம் போல் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு சுமார் 150 சற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட மலைரயில் மேற்கொண்டு பயணிக்க வழியின்றி  நடு வழியில் நிறுத்தப்பட்டது. சீரமைப்பு பணிகள் தாமதமாகும் என்பதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு திருப்பி அனுப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். ரயிலில் இருந்த பயணிகள் பலரும்  மாற்று பேருந்து மற்றும் கார் மூலம்  உதகை சென்றனர்.மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் சீரமைப்பு பணிக்காக இருபதிற்கும் மேற்பட்ட பணியாளர்களை அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இருப்பு பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகள் இன்று மாலைக்குள் சீர் செய்யப்பட்டு நாளை வழக்கம் போல் மலைரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.