சேலம், பிப்.28- எடப்பாடி வட்டாரத்தில் பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்தது போக, எஞ்சிய செங்கரும்பை விவசாயிகள் தற்போது அறுவடை செய்து வருகின்றனர். சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல், பில்லுக்குறிச்சி, கோனேரிப்பட்டி, கல்வடங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பை சாகுபடி செய்தனர். தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்புடன் முழு செங்கரும்பு வழங்க உத்தரவிட்டு, அந்தந்த மாவட்டத்தில் தேவையான அளவு செங்கரும்பு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. இந்நிலையில், பூலாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், பொங்கல் பண்டிகைக்கு போக எஞ்சியுள்ள செங்கரும்பை விவசாயிகள் அறுவடை செய்ய துவங்கியுள்ளனர். இதனால், இப்பகுதியில் செங்கரும்பு அறுவடை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த செங்கரும்புகளை வெளி மாவட்ட வியாபாரிகள் நேரில் வந்து, மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர். கோவில் திருவிழாக்களுக்கு பயன்படுத்த அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இவர்கள் விவசாயிகளிடம் செங்கரும்பு ஒன்றை ரூ.20க்கு வாங்கி மொத்தமாக கொண்டு செல்கின்றனர். இதனால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.