நாமக்கல், பிப்.11- குமாரபாளையத்திலுள்ள எக்ஸல் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற அறிவுத்திறன் போட்டியில், ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் பப்ளிக் பள்ளியில், குழந்தைகளின் அறிவுத்திறனை வெளிப்படுத்தும் வகையில் நடனம், திருக்குறள் வாசித்தல், கட்டுரை, ஓவியம், நினைவாற்றல் மற்றும் கலைத்திறமையை வெளிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பள்ளி அரங்கத்தில் நடைபெற்றன. எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே.நடேசன், துணைத்தலைவர் என்.மதன் கார்த்திக், நிர்வாக அறங்காவலர் என்.பார்வதி, பள்ளி இயக்குநர் எம்.கவியரசி, முதல்வர் கோர்சிகா ஆகியோர் நிகழ்வுக்கு வருகை தந்த பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை வரவேற்று பேசினர். மாறுவேடப் போட்டியில் பங்கேற்ற குழந்தைகள் சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் மற்றும் பாரதியார் போன்று வேடமிட்டு வசனங்கள் பேசி அசத்தினர். இந்நிகழ்வில் 400க்கும் மேற்பட்ட குழந்தைகள், தங்கள் பெற்றோருடன் வருகை தந்து, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வென்றனர்.