கோவை, டிச.28- சூலூர் அருகே அரசு பேருந்து முறையான நேரத்தில் இயக்கப்படாததைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், சூலூரை அடுத்த காடுவெட்டி பாளையம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த பேருந்து சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால், கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதி யுற்று வருகின்றனர். இந்நிலையில், நல்ல கவுண்டன் பாளையம் பொதுமக்கள், கிராமத்திற்கு வந்த 6 என்ற இலக்க மிட்ட அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது.