தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த சம்பளம் ரூ.425.40 ஐ வழங்கிடக்கோரியும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வால்பாறை சின்கோனா பகுதியிலுள்ள மாவட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் முன்பு திங்களன்று வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் (சிஐடியு) சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் (சிஐடியு) பொதுச் செயலாளர் பி,பரமசிவம் தலைமை வகித்தார்.
முன்னதாக சங்கத்தின் துணைத் தலைவர் மணிகண்டன் வரவேற்று பேசினார்.
இதில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக (30-07-2021) அன்று தமிழக அரசு அறிவித்தபடி ரூ 425.40 ஐ உடனடியாக வழங்கிடக்கோரியும்,
அரசு தேயிலைத் தோட்டங்களில் பல ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரியும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். தேயிலை தொழிலாளர்களுக்கு சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிடவும், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை அனைத்தையும் வழங்கிட வேண்டும். பணி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன்களையும்,பணிக்கொடையும் உடனடியாக காலந்தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும். நிர்வாக நலனை கருத்தில் கொண்டு மரம் வெட்டுதல், கவாத்து வெட்டுதல்,
களை எடுத்தல், உரம் போடுதல் உள்ளிட்டவை ஒப்பந்தகாரர்களுக்கு வழங்காமல் அரசு தேயிலைக் கழகமான டேன் டீ நிர்வாகமே நடத்திட வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வால்பாறை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் (சிஐடியு) மாரிமுத்து மற்றும் நேதாஜி, முருகன், தில்லை, ரத்தினம், உள்ளிட்ட திரளானோர் கலந்துக்கொண்டனர்.