districts

img

தொண்டாமுத்தூர் அருகே சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி? வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தி ஆய்வு!

கோவை தொண்டாமுத்தூர் வண்டிக்காரன்புதூர் அருகே சிறுத்தை தாக்கி இரண்டு ஆடுகள் உயிரிழந்த நிலையில்,  வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தினர்.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரன்புதூரை சேர்ந்தவர் பெரியசாமி.  இவர் தனது விவசாய தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று வழக்கம்போல் ஆடுகளைத் தொழுவத்தில் கட்டி விட்டு பெரியசாமி வீட்டிற்குச் சென்றார்.  பின்னர் காலை வந்து பார்த்தபோது தொழுவத்தில் இருந்த இரண்டு ஆடுகள் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தது.  

இதையடுத்து பெரியசாமி போளுவாம்பட்டி வனத்துறையினருக்குத் தகவல் அளித்தார்.  சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்ட போது சிறுத்தையின் கால் தடம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இறந்த ஆடுகளுக்குக் கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்தனர்.

பின்னர் மீண்டும் சிறுத்தை அங்கு வரலாம் என்பதால் தானியங்கி  கண்காணிப்பு கேமராவை வனத்துறையினர் பொருத்திக் கண்காணித்து வருகின்றனர்.  தொண்டாமுத்தூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை மற்றும் செந்நாய்கள் வன எல்லையில் உலா வருவதால் கால்நடை விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.