இளம்பிள்ளை, ஜன.30- கொங்கணாபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி விலை குறைத்து வழங்கப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பகுதியில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் (கொங்கணாபுரம் கிளைS351) செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் பருத்தி ஏலம் விட்டதில் ஒரு கிலோ பருத்தி ரூ.14க்கு சென்றதாகவும், இந்த வாரம் ரூ.7 ஆக குறைந்த விலைக்கு ஏலம் போகியுள்ளது. இந்நிலையில், பருத்தி விலை குறைத்து வழங்கப்பட்டதைக் கண்டித்து சனியன்று அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டுறவு சங்கம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடப்பாடி காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், சங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.