districts

கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.3 கோடி முறைகேடு தலைமறைவாக இருந்த நிர்வாகிகள் கைது

சேலம், பிப்.2- எடப்பாடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் ரூ.3 கோடி முறைகேட்டில் ஈடுபட்டு, தலைமறைவாக இருந்த அதன் நிர்வாகிகளை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் தலைவராக சத்தியபானு, துணைத்தலைவராக வடிவேல், செயலாளராக மோகன், துணைச்செயலாளராக மணி ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், நகைகடன் வழங்கியது, வைப்புத்தொகை பெற்றது மற்றும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கியது என ரூ.3 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிமுகவைச் சேர்ந்த சத்தியபானு, மோகன், வடிவேல், கூட்டுறவு சங்கங்களின் கள மேற்பார்வையாளர் ஆனந்தகுமார், நிர்வாககுழு உறுப்பினர் வேலுசாமி ஆகியோர் மீது சங்ககிரி கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் முத்து விஜயா, சேலம் பொருளாதார குற்றபிரிவு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் மோகன், கள மேற்பார்வையாளர் ஆனந்தகுமார், துணைச்செயலாளர் மணி ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த சத்தியபானு, வடிவேலு மற்றும் வேலுசாமி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முத்தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.