பொள்ளாச்சி அடுத்த ஜமீன் ஊத்துக்குளியிலுள்ள பிரதான குடிநீர் குழாய் உடைந்ததில் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் விரையமானது.
பொள்ளாச்சி அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி , ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜமீன் ஊத்துக்குளி - பாலக்காடு சாலைக்கு செல்லும் வழியில் உள்ள கிருஷ்ணாகுளம் எதிரே உள்ள பிரதான குடிநீர் குழாய் வெள்ளியன்று உடைப்பு ஏற்பட்டது.
இதனால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணானது. இதன்பின்னர் ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு உடனடியாக குடிநீர் குழாய் அடைப்பு சரிசெய்யப்பட்டது.
கோடைக்காலங்களில் இதுபோன்ற குடிநீர் குழாய் உடைப்புகளின் மூலமாக ஏற்படும் குடிநீர் விரையங்கள் உடனடியாக சரி செய்யப்படவில்லையெனில், குடிநீர் பஞ்சத்திற்கு வழிவகுக்கும் என, சூழலியல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.