districts

img

பாகுபாடு காட்டு ஆர்டிகிள் 15

இந்த சினிமாவுக்கு ஏன் இப்படிப் பெயர் வைத்தார்கள்?   இந்திய அரசியலமைப்பு சட்ட விதி எண் 15 ஐ இது குறிப்பிடுகிறது.  அந்தச் சட்டம் என்ன சொல்கிறது?  நிறையச் சொல்கிறது.  “சாதி, மத, இன, பால், பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் இந்திய குடிமக்களிடம் அரசும், அதன் அமைப்புகளும் பாகுபாடு காட்டக்கூடாது.” என்பது அதில் முக்கியமான ஒன்று. உத்தரப்பிரதேசம் என்றொரு புண்ணிய பூமி இந்திய மண்ணில் இருக்கிறது. “பாகுபாடு” காட்டு என்பதே அங்கு வேதம்.  இப்படியொரு சட்டம் இருப்பது மக்களுக்கு தெரியாமலிருப்பதில் வியப்பில்லை.  ஆனால் அரசு அமைப்பில் ஊழியம் செய்பவர்களுக்கே தெரியவில்லை. குறிப்பாக காவல் துறையில் ஊழியம் செய்து கொண்டு, மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கும் “சட்டத்தின் காவலர்களுக்கே” தெரியவில்லை. தெரியவில்லை என்றால் தெரியாதது போல அவர்கள் இருக்கிறார்கள். அரசியல்வாதி- அதிகாரி-காண்ட்ராக்டர் கூட்டு ராஜ்ஜியத்தில் யாருக்கு என்ன நியாயம் கிடைக்கும்?

இரண்டு தலித் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து தூக்கில் தொங்க விடுகிறான்  ஒரு கொடுமைக்காரன்.  இந்த (உண்மை) சம்பவத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட “ஆர்டிகிள் 15” இந்தி சினிமா உ.பி. மாநிலத்தின் படு கேவலமான அரசு நிர்வாக அமைப்பை தோலு ரித்து தொங்கப்போடுகிறது. யாருக்கும் எந்தப் பதற்றமும் இல்லை.  இது சாதாரணமாக நடப்பதுதான்.என்பது போல நடந்து  கொள்கிறார்கள். “சிறுமிகள் ஓரின சேர்க்கை யாளர்கள். இது தெரிந்த தந்தைமார்கள் கௌரவம் கருதி அவர்களை  கொன்று தூக்கிலிட்டு  விட்டார்கள்.

”  எனக்கூறி கேஸை முடிக்க காவல் துறை நிர்வாகம் முனைப்பு காட்டுகிறது.  மருத்துவ மனை நிர்வாகம் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை திருத்துகிறது. மாவட்ட, மாநில நிர்வாகம் கொலை யாளிக்கு ஆதரவும், அரவணைப்பும் தருகிறது.  தலித் மக்களுக்கு “பெப்பே” காட்டுகிறது. உ.பி.யின் சமூக நிலைக்கு இது ஒரு “சாம்பிள்” தான். மாநிலம் முழுக்க இதுதான் நிலைமை. எங்கும் “பாகுபாடு” தலைவிரித்தாடுகிறது. மனசாட்சி மிக்க ஒரு நேர்மையான காவல் அதிகாரி ஆர்டிகிள் 15 ஐ அமல்படுத்த முனைகிறார்.  நீதி, நியாயம் என்பதையெல்லாம் தாண்டி “சட்டத்தை” நிலை நாட்ட கடுமையாகப் போராடு கிறார்.  அப்புறம் என்ன நடந்தது? என்பது மீதிக் கதை. “கைக்கு, யானைக்கு, சைக்கிளுக்கு, மலருக்கு  மாறி மாறி வோட்டுப் போட்டுக்கொண்டிருக்கிறோம். வாழ்க்கை இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது..” என்கிறார் உயிருக்குப் பயந்த  கீழ்நிலை காவலர் ஒருவர்.  

“நீங்க மாற்றலாகிப் போயிடுவீங்க.. நாங்க இவங்க கிட்ட உயிர் வாழ முடியாது.. கொன்னுடுவாங்க..” என்கிறார் அவர். ஆர்டிகிள் 15 ஐ வைத்து சட்ட, நீதி அமைப்பு களின் “பாகுபாட்டினை” சும்மா துவைத்து எடுத்திரு க்கிறார்கள் கதாசிரியர்கள் அனுபவ் சின்ஹா மற்றும் கவுரவ் சோலங்கி.  இயக்கியிருப்பவர் அனுபவ் சின்ஹா.  2014 இல் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம்.  2019 இல் லண்டனில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவின் துவக்க படமாக திரையிடப் பட்ட பெருமை பெற்றது. ஸ்கிரீன், ஃபிலிம்ஃபேர், ஜீ விருதுகள் பல பெற்றது.  மக்கள் சமூகத்தை கூறு கூறாகப் பிரித்து பாகுபாட்டினை நிலை நிறுத்தும் தத்துவத்திற்கு சொந்தக்காரர்கள்தான் மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள் உ.பி.யில்.  இனி சமத்துவம் படும் பாட்டினை சொல்லவும் வேண்டுமோ..?