மேட்டுப்பாளையம், ஜூலை 25- மின் கட்டண உயர்வை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தொண்டர்கள் “வாக்களிப்பீர் தொப்பி சின்னத்திற்கே” என்ற பதாகைகளுடன் கலந்து கொண்ட சம்பவம் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் அருண்குமார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.தனபால், ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன், அதிமுகவிலிருந்து பழனிச்சாமி நீக்கிய ஓ.பன்னீர்செல்வம் புகைப்படமும் பொறிக்கப்பட்ட பாதைகள் தென்பட்டன.
மேலும், தேர்தல் காலத்தில் அதிமுக வேட்பாளர்கள் சுயேட்சையாக நின்றபோது தயாரிக்கப்பட்ட பதாகைகளும் போராட்டத்தில் தென்பட்டன. அந்த பதாகைகளும் “வாக்களிப்பீர் தொப்பி சின்னத்திற்கே” என சின்னத்துடன் காணப்பட்ட பதாகைகள் பொதுமக்கள் மத்தியில் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.