ஈரோடு, டிச. 21- கொடுமுடி பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ் மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், கொடுமுடிபுதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை எண்.3523 செயல்பட்டு வருகிறது. இதனை இட மாற்றம் செய்ய வேண்டும். புதிய பேருந்து நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கடைகளை ஏலம் நடத்தி பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர். அமிர்தலிங்கம், கே.ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், தாலுகா செயலாளர் கே.பி.கனகவேல், சிபிஐ மாவட்ட துணை செயலாளர் எம்.குணசேகரன், ஒன்றிய செயலாளர் ஆர்.ரணதிவேல் உள்ளிட்ட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.