சேலம், அக்.18- நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர் களாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. நகராட்சி, மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும். நகர சுகாதார செவிலியர்கள், மாநகர சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலச் செயலாளர் நா.செந்தில்குமார் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் போராட்டத்தை துவக்கி வைத்தார். மாநில துணைப்பொதுச்செயலாளர் பி.தியாகராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் க.முருகானந்தம் நிறைவுறையாற்றினார்.இதில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் வெங்கடேசன், உள்ளாட்சி நிதி தணிக்கை பணி மன்ற மாநிலத் தலைவர் அம்பேத்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.