districts

img

பிளாஸ்டிக் கழிவுகளால் வன விலங்குகளுக்கு ஆபத்து

கோவை, பிப்.6- கோவை மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் குவிந்துகிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால், வன விலங்குகள் உயிரிழக்க நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை, நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி இருப்பதால் யானைகள், காட்டெருமைகள் நடமாட்டம் அதிகம் காணப்படும். காடுகளில் ஏற்பட்டு வரும் பெரும் மாற்றத்தால், கடந்த சில ஆண்டுகளாக யானைகள், காட்டெருமைகள் உணவு, தண்ணீரை தேடி நகர பகுதிகளுக்கு வருவது அதிகமாகிவிட்டது. கோவை மருதமலை பகுதியை சுற்றி காட்டு யானைகள் எப்போதுமே நடமாடிக் கொண்டிருக்கும். மருதமலை அடிவாரம் வரை மக்கள் குடியமர்ந்ததாலும், கோவிலுக்கு பொது மக்கள் அதிகம் வருவதாலும் குப்பைகள் குவிய தொடங்கின. வன உயிரின ஆர்வலர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருதமலை பகுதியை ஆய்வு செய்தனர்.

அப்போது யானை சாணத்தில் இருந்து பால் கவர், மாஸ்க், மசாலா கவர், பிஸ்கெட் கவர், ரிப்பன், நாப்கின், பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருட்களை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதேபோல கோத்தகிரியில் காட்டெருமைகள் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததால் 3க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் இறந்தது பரிசோதனையில் தெரியவந்தது. காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது இறந்தது 3 வயது மதிக்கத்தக்க பெண் காட்டெருமை என தெரியவந்தது. அதன் வயிற்றில் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுபோன்ற சில மாதங்களில் 3க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் இறந்துள்ளது. எனவே பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் சாலை ஓரங்களில் வீசுவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறுகையில், கோவை மாவட்டம், மருதமலை அடிவாரத்துக்கு உட்பட்ட சாலையில் தன்னார்வலர்கள் உடன் இணைந்து அனைத்து பகுதிகளையும் வனத்துறையினர் தூய்மை செய்தோம். இதேபோல கோவை மாவட்டத்தில் வனத்துறை சார்பாக பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தன்னார்வலர்களுடன் சேர்ந்து அகற்றி வருகிறோம். சமீபத்தில் கணுவாய் உள்ளிட்ட ரயில்வே பாதைகளின் அருகில் தன்னார்வலர்களோடு இணைந்து குப்பைகளை அகற்றினோம். மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்ற முடிவு செய்துள்ளோம். யானைகள் அபார மோப்ப சக்தி உடையவை. யானைகள் வேண்டுமென்றே பிளாஸ்டிக்கை உட்கொள்ளாது. யானைகள் அதிகமான உணவை உட்கொள்ளும். யானைகள் வயிற்றில் உணவை ஜீரணிக்க ஒரே ஒரு அறைதான் இருக்கும்.  எனவே, குறைவான அளவு பிளாஸ்டிக் வயிற்றிலேயே தங்க வழியில்லை. அவற்றின் குடல் பெரிது என்பதால் சாணத்தோடு சேர்ந்து வெளியே வந்துவிடும். இருப்பினும், யானைகள் தொடர்ச்சியாக உணவோடு சேர்த்து தெரியாமல் அதிக அளவிலான பிளாஸ்டிக் உட்கொள்ளும்போது, அவை வெளியேற வழியில்லாமல் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படலாம். வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப்பொருட்கள் போடக்கூடாது. பொதுமக்களும் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப் பொருட்களை அப்படியே தூக்கி எறிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், என அவர் வலியுறுத்தி உள்ளார்.