சேலம், ஜன.21- குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் சின்னேரி வயல்காடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகர 26 ஆவது கோட்டம், சின்னேரி வயல்காடு, பகத்சிங் தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால், இங்கு வசிப்பவர்களுக்கு 45 நாட்களுக்கு மேல் குடிநீர் வரவில்லை. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி உதவி ஆணையர் செல்வராஜ், உதவி பொறியாளர்கள் பாலசுப்பிரமணி, சீனிவாசன் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதில், உடனடியாக குடிநீர் இணைப்பு கொடுப்பதாகவும், 15 நாட்களில் கிடப்பில் உள்ள சாக்கடை மற்றும் சாலை அமைக்கும் பணியை முடித்து கொடுப்பதாகவும் உறுதியளித்தனர். முன்னதாக, இந்த போராட்டத்தில் சிபிஎம் வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார், வாலிபர் சங்க மாநகர தலைவர் சதீஷ்குமார், மாநகர செயலாளர் குருபிரசன்னா, சிபிஎம் வடக்கு மாநகரக்குழு உறுப்பினர்கள் கதிர்வேல், ராஜேஷ்குமார், கிளைச் செயலாளர்கள் ரம்யா, ஞானவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.