நாமக்கல், ஏப். 13- கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள, வெள்ளக்கல் ஆறு முதல் ஊர்முடிபட்டிய கிராமம் வரை செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் நல சங்க மாவட்ட செயலாளர் தங்கராசு தலைமை ஏற்றார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.டி.கண்ணன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இதில், கொல்லிமலை சேலூர் நாடு, வெள்ளக்கல் ஆறு முதல் ஊர்முடிபட்டி கிராம வரை உள்ள சாலை மிக மோசமான நிலையில், உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த சாலையை விரைந்து சீரமைத்து தர வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர். பின்னர், சாலை அமைக்க வலியுறுத்தி, கிராம மக்கள் தங்களது ரேசன் அட்டைகளை திருப்பி அளிக்க முற்பட்டனர். இதனையடுத்து, சிபிஎம் தலைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய மாவட்ட வருவாய் அலுவலர் மணி மேகலை, கொல்லிமலை பகுதியில் சாலைகளை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனையேற்று, போரட்டத்தை விலக்கிக்கொண்டனர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மலை வாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.