அவிநாசி, பிப்.2- அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நான்கு பேர் புதனன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் திமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி, 10வது வார்டில் எஸ்.சுப்பிரமணியனும் (66), 22வது வார்டில் எஸ். பார்வதியும் (39), 14வது வார்டில் பி.தேவராஜனும் (66), 16வது வார்டில் எஸ்.வெங்கடாசலமும் (56), 11வது வார்டில் எஸ்.கலைச்செல்வியும் (38) போட்டியிடுகின்றனர். இதில் சுப்பிரமணி, பார்வதி, தேவராஜன், வெங்கடாசலம் உள்ளிட்டோர் புதனன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த வேட்புமனு தாக்கலின்போது திமுக திருமுருகன்பூண்டி நகர நிர்வாகி பாரதி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி சென்னியப்பன், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.