கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக கல்பனா வெள்ளியன்று தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 96 இடங்களில் திமுக கூட்டணியின் மாமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர்.
ஒரு வார்டில் சுயேட்சையும், 3 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இவர்களது பதவி ஏற்பு விழா கடந்த 2- ந் தேதி நடந்தது. இதனைத்தொடர்ந்து மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் வெள்ளியன்று காலை 9.30 மணிக்கு கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா கூட்டரங்கில் நடைபெற்றது. கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது..
இதில் 19- ஆவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் கல்பனா போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்டார். இவர் கோவை மாநகராட்சியின் ஆறாவது மேயராகவும், முதல் பெண் மேயராக பொறுப்பேற்றார் கல்பனா.
இதனையடுத்து, காலை 10 மணிக்கு மேயர் கல்பனா அங்கி அணிந்து மேயர் இருக்கையில் அமர்ந்தார். அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி செங்கோல் மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், மாவட்ட பொறுப்பாளர்கள் கார்த்திக், மருதமலை சேனாதிபதி, பையா ஆர் கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் மேயர்கள், ராஜ்குமார், காலனி வெங்கடாசலம் ஆகியோர் பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த மறைமுக தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மூன்று மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. இதர 97 மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.