districts

img

சின்னியம்பாளையம் தியாகிகளின் 76 ஆவது ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு

சின்னியம்பாளையம் தியாகிகளின் 76 ஆவது ஆண்டு நினைவுதினம் சனியன்று அனுசரிக்கப்பட்டது. சின்னியம்பாளையத்தில் உள்ள தியாகிகள் மேடையில் மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் திரன்டு அஞ்சலி செலுத்தினர்.

உழைக்கும் வர்க்கத்தின் உரிமைப்போராட்டத்தின் அடையாளமாய் சின்னியம்பாளையம் தியாகிகள் திகழ்கிறார்கள்.  இவர்களின் நினைவுதினத்தன்று ஒவ்வொரு ஆண்டும்  சிபிஎம், சிபிஐ இரண்டு கட்சியினரும் இணைந்து நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக சனியன்று சின்னியம்பாளையம் தியாகிகள் 76 ஆம் ஆண்டு நினைவுதினம் எழுச்சிகரமாக அனுசரிக்கப்பட்டது.  சின்னியம்பாளையம் தியாகிகள் மேடையில் நடைபெற்ற நிகழ்விற்கு சிபிஎம் கிளை செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிபிஐ கிளை செயலாளர் சுரேஷ் வரவேற்புரையாற்றினார்.  முன்னதாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகளை தலைவர்கள் ஏற்றிவைத்தனர். இதனைத்தொடர்ந்து தியாகிகள் மேடைக்கு இரு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கத்தின் சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சுப்பராயன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.