districts

img

கோவையில் மாகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் மீது வழக்கு

தேர்தல் விதிமுறைகளை மீறி கூட்டம் கூடியதாக மகாத்மா காந்தி நினைவுநாளில் கோவையில்  அஞ்சலி செலுத்திய   23 பேர் மீது போலீசார்  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை, சிவானந்தா காலனியில், கோவை மக்கள் ஒற்றுமை மேடை சார்பில், காந்தி நினைவு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில குழு உறுப்பினர் சி.பத்மநாபன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர்  கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். காவல்துறையின் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கபட்ட பிறகே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும் கோட்சேவின் விசுவாசிகளாக உள்ள சில போலீசார் இந்நிகழ்வை திட்டமிட்டபடி நடைபெறாமல் இருக்க பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினர்.

இதனையடுத்து உச்சத்துக்கே சென்று ஜி ராமகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்த ஒலிவாங்கியை (மைக்) பிடுங்க சென்றனர். இதன் காரணமாக இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போலீசாருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்து மதவெறியர்களால் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் என்கிற வாசகத்தை அகற்றிய ஆகவேண்டும் என போலீசார் பிடிவாதமாக இருந்தனர்.

இதனையடுத்து சில சமரசங்களுக்கு பின்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  போலீசாரின் இத்தகைய நடவடிக்கை பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பல்வேறு தலைவர்கள்  போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன அறிக்கையை வெளியிட்டனர்.

இந்நிலையில் போலீசார் தங்களை நியாய வாதிகளாக காட்டிக்கொள்ள அஞ்சலி செலுத்த வந்த சிபிஎம் மாநிலகுழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்ட 20  தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தேர்தல் பறக்கும்படை அலுவலர் சுரேஷ்குமாரிடம் ரத்தினபுரி போலீசார் புகாரை பெற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்

இதில்,   கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.