districts

img

தமிழக மக்களுக்கு நிவாரணம் வழங்க மறுக்கும் மோடி அரசுக்கு எதிராக வழக்கு

நாகர்கோவில், மார்ச் 26 - தமிழக மக்களுக்கு நிவாரண நிதி வழங்க மறுக்கும் ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்ச் 25 திங்களன்று மாலை நாங்குநேரியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பெர்ட் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு உரையாற்றிய மு.க.ஸ்டாலின் பேசியதன் சாரம்சம் வருமாறு:  சில நாட்களுக்கு முன்னால், குமரிக்கும் – திருநெல்வேலிக்கும் பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். தேர்தல் வந்துவிட்டது என்று இப்போது அடிக்கடி வரும் பிரதமர் மோடி அவர்களே… வெள்ளம் வந்தபோது எங்கு இருந்தீர்கள்… இரண்டு இயற்கைப் பேரிடர்! அடுத்தடுத்து தமிழ்நாட்டின் வட மாவட்டங்களையும் - தென் மாவட்டங்களையும் தாக்கியது… பிரதமர் மோடி அவர்களே… ஒரு பைசாவாவது கொடுத்தீர்களா? இல்லையே! நிதிதான் தரவில்லை… ஓட்டு கேட்டு வந்தபோது மக்களுக்கு ஆறுதல் வார்த்தையாவது கூறினீர்களா? ஒன்றிய அரசிடமிருந்து நிதி வரவில்லை என்றாலும், மக்களுக்குச் செய்ய வேண்டியதை – தர வேண்டியதை – உதவ வேண்டியதை - உடனடியாக கொடுக்க வேண்டும் என்று நாங்கள் செயல்பட்டோம். தமிழ்நாட்டின் மொத்த அமைச்சர்களும் இங்கு வந்து தங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்கள். மக்களோடு மக்களாக கூடவே இருந்து,  ஆறுதல் கூறி, என்ன தேவைகள் என்று கூடவே இருந்து, வேண்டியதை செய்து கொடுத்தார்கள். நானும், டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கினேன். கடந்த பிப்ரவரி 25 அன்று, தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 38 ஆயிரத்து 614 பேருக்கு, 118 கோடியே 87 லட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ’’கை’’தான், இந்தக் “கை’’.

ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை

“மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள்… அவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று, இரண்டு இயற்கைப் பேரிடர்களுக்கான இழப்பீடு – மறு சீரமைப்பு – நிவாரணத் தொகையாக 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டோம். தொடர்ந்து கேட்கிறோம்… தந்தார்களா? இல்லை. நாம் உரிமையோடு கேட்பதைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் போகிறோம் என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாக அறிவிக்கிறேன். சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் சட்டத்துக்குக் கையெழுத்து போடச் சொல்லுங்கள் என்று நீதிமன்றம் சென்றோம். பொன்முடி அவர்களை மீண்டும் அமைச்சராக்க வலியுறுத்த நீதிமன்றம் சென்று வென்றோம். இப்போது நிதி கேட்டும் நீதிமன்றம்தான் செல்ல வேண்டுமென்றால், பா.ஜ.க. எத்தகைய, ஓரவஞ்சனையான அரசாக நடந்து கொண்டிருக்கிறது?

நிதியமைச்சர் ஏளனம்

ஓரவஞ்சனை மட்டுமா செய்கிறார்கள்? நிதியையும் தராமல் நம்முடைய மக்களை ஏளனம் வேறு செய்கிறார்கள். கேலி, கிண்டல் செய்கிறார்கள். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், நிவாரண நிதியும் தரமாட்டார்களாம். மாநில அரசே மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கினால் அதையும் ‘பிச்சை’ என்று ஏளனம் செய்வார்களாம். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, அரசு செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் மக்களின் பணம். அவர்கள் கஷ்டப்படும்போது அவர்களுக்கு உதவுவதுதான் அரசின் கடமை. அதைக் கேட்பது மக்களின் உரிமை. மக்களாட்சியில் மக்களையே அவமதித்தபோதே உங்களின் தோல்வி உறுதியாகிவிட்டது! அம்மையார் அவர்களே… ஒரே ஒருமுறையாவது மக்களை வந்து சந்தித்துப் பாருங்கள்… அப்போது தெரியும்… மக்கள் உங்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள் என்று! அதற்குப் பிறகு, பிச்சை என்ற வார்த்தையே உங்கள் நினைவிற்கு வராது!

பாஜகவுக்கு வாக்களிப்பது சந்ததிகளுக்கு துரோகம்

ஆட்சி இருக்கிறது… பதவி இருக்கிறது… என்று பா.ஜ.க.வினர் என்ன வேண்டுமானாலும் ஆணவமாகப் பேசலாமா? அதிலும் ஒரு ஒன்றிய அமைச்சர் தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கூறினால், இன்னொரு ஒன்றிய அமைச்சர் தமிழர்களை தீவிரவாதிகள் – பயங்கரவாதிகள் எனக்  குற்றம் சாட்டுகிறார். தமிழர்கள் மேல் ஏன் இத்தனை கோபம்! வெறுப்பு! வன்மம்! மக்களிடையே வெறுப்பை விதைத்து, பிளவுகளை உண்டாக்கி, அதில் குளிர்காய நினைக்கும் பா.ஜ.க.வின் எண்ணங்கள் ஒருபோதும் பலிக்காது! மேம்பட்ட சிந்தனைகள் உள்ள நாம், நம்முடைய சகோதர –சகோதரிகளுக்கு வழிகாட்ட வேண்டும்! பா.ஜ.க.விற்கு வாக்களிப்பது அவமானம் என்று எடுத்துச் சொல்ல வேண்டும். பா.ஜ.க.விற்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததிக்கு செய்யும் துரோகம் என்று புரிய வைக்க வேண்டும்!

மீனவர்களுக்கு கொடுத்த உறுதிமொழி என்னாச்சு?

சமீபத்தில் கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் மோடி, ஒரு அபத்தமான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதற்குத் தி.மு.க.வும் - காங்கிரசும்தான் காரணம் என்று கூறி இருக்கிறார். பத்து வருடமாக, தி.மு.க.வும் காங்கிரசுமா ஆட்சியில் இருக்கிறது? மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களைக் கைது செய்ததை வேடிக்கை பார்த்தது உங்கள் ஆட்சிதான். தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கி – கைது செய்து, படகுகள் - வலைகளைப் பறித்து –  சித்திரவதை செய்கிறது இலங்கைக் கடற்படை. 56 இன்ச் என்று இறுமாப்புடன் சொல்லிக் கொள்கிறீர்களே… தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்வதைக் கண்டிக்க, தடுத்து நிறுத்த, உங்களுக்கு ஏன் துணிச்சல் வரவில்லை? ஏன் தைரியம் இல்லை? இலங்கையைப் பார்த்து பயப்படுகிறீர்களா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர்கூட தாக்கப்பட மாட்டார்கள் என்று 2014-ஆம் ஆண்டு பிரதமர் ஆவதற்கு முன்னால் இதே கன்னியாகுமரியில் கூறினீர்களே… அதுமட்டுமா, அப்போது என்னவெல்லாம் கூறினீர்கள்? தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதற்கு அன்னை சோனியா காந்தி அவர்களும், அம்மையார் ஜெயலலிதா அவர்களும்தான் காரணம் என்று கூறினீர்கள். பத்தாண்டுகள் முடிந்துவிட்டதே! இப்போது பெயர்களை மட்டும் மாற்றி, தி.மு.க.வும் - காங்கிரசும்தான் காரணம் என்று கூறுகிறார். பத்தாண்டு காலத்தில் பிரதமர் மோடி எதுவும் செய்யவில்லை என்பதற்கு, இப்படி ஒப்புதலை அவரே தருகிறார். 2014-இல் இருந்து, 2024-க்குள் பத்து ஆண்டுகள்தான், தமிழ்நாட்டு மீனவர்கள் மேல் வரலாற்றிலேயே, அதிக அளவிலான தாக்குதல்…

மோடியின் முழுநேர வேலை

நாங்கள் எத்தனை கடிதம் எழுதியிருப்போம்… நம்முடைய எம்.பி.க்கள் எத்தனை முறை இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசியிருப்பார்கள்? இலங்கை மாதிரியான அண்டை நாட்டைப் பார்த்தே, இந்தளவிற்கு பயப்படும் ஆட்சியை நடத்தும் பிரதமர் மோடி, பத்தாண்டுகளுக்கு முன்னால் இருந்த காங்கிரஸ் ஆட்சியைக் குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்… இன்னும் சொல்ல வேண்டும் என்றால், பிரதமர் மோடியின் முழுநேர வேலை என்ன தெரியுமா? இன்றைக்குப் பண்டித நேருவை என்ன சொல்லித் திட்டலாம்? அன்னை சோனியாவை வசை பாட முடியுமா? சகோதரர் ராகுல் காந்தியைப் பார்த்து, பயம் இல்லாதது போல் எப்படி காட்டிக்கொள்ளலாம்! எல்லாவற்றிற்கும் மேல், தேர்தலுக்கு ஒரு ரூபாய்கூட செலவு செய்யவிடாமல் காங்கிரஸ் வங்கிக் கணக்கை முடக்கி, பா.ஜ.க.வின் தேர்தல் பத்திர ஊழலை எப்படி திசைதிருப்பலாம்… இதைத்தான் பிரதமர் மோடி சிந்தித்துக் கொண்டிருக்கிறார்... மோடியின் ஆட்சி அவருக்கு நெருக்கமான சிலருக்கு மட்டுமே சாதகமான ஆட்சி. ஆனால், நாம் அமைக்கப் போகும் இந்தியா கூட்டணி ஆட்சி எல்லோருக்கும் பொதுவான ஆட்சி!