கோயம்புத்தூர், அக்.13- நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என, கோவையில் நடைபெற்ற மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கத்தின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கத்தின் மாநில மாநாடு, கோவையில் அக்.12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டின் முதல் நாளான சனிக்கிழமை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், புதுகை பூபாளம் கலைக்குழு, பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் பங்கேற்ற நிகழ்வு நடைபெற்றது.
இரண்டாம் நாளான ஞாயிறன்று நடைபெற்ற முதல் அமர்வில், “நலவாழ்வு உரிமை” என்ற தலைப்பில் மருத்துவர்கள் டி.சுந்தரராமன், திருநாவுக்கரசு, கிரிஸ்குமார், சி.கருணாகரன் ஆகியோர் கருத்துரையாற்றினர். இரண்டாம் அமர்வில் “நீட் & நெக்ஸ்ட்” என்ற தலைப்பில் மருத்துவர்கள் டி.இளந்திரையன், நேருபாபு, எஸ்.காசி ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற மருத்துவர் அரங்க பொதுக்குழுவில், நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
\நல்வாழ்வு பட்ஜெட்டுக்கு அதிக நிதி ஒதுக்குக!
நல்வாழ்வு என்பது மக்களின் அடிப்படை உரிமை, இலவசமான. அனைவருக்கும் கிடைக்கக்கூடிய அடிப்படை சுகாதார வசதிகளையும், சேவைகளையும் மத்திய மாநில அரசுகள் இலவசமாக செய்துதரவேண்டும். பொது சுகாதார கட்டமைப்பை விரிவுபடுத்தவும். மேம்படுத்தவும் தேவையான நிதி ஆதாரத்தை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்யவேண்டும்.
தமிழக அரசு, ‘ஒப்பந்த’ மற்றும் ‘அவுட்சோர்சிங்’ முறையில் பணியமர்த்துவதை கைவிட்டு, ‘நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு காலியிடங்களை நிரப்புவதுடன், ஏற்கனவே பணியிலிருக்கும், தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஜெனரிக் மருந்துகள் & மருத்துவ உபகரணங்கள்
ஜெனரிக் மருந்துகளை பொதுத்துறை மருந்து நிறுவனங்கள் மூலம் தயாரித்து, வழங்கிட வேண்டும். ஜெனரிக் மருந்துக்கடைகளை தேவையான அளவிற்கு அரசே துவக்கவேண்டும்; அதன் பிறகே நாடெங்கிலும் உள்ள மருத்துவர்களை, ஜெனரிக் மருந்துகளை பரிந்துரை செய்ய வலியுறுத்த வேண்டும்.
நெடுஞ்சாலை விபத்துக்கள்
சாலைப் போக்குவரத்து விதிகளை முறையாக நடைமுறைப்படுத்தவேண்டும். சாலைகளின் கட்டுமானத் தரத்தை மேம்படுத்துவதோடு, முறையான பராமரிப்பு பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்ளவேண்டும்; தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 100 கி.மீ தூரத்திற்கு ஒன்று வீதம், விபத்து மற்றும் உயிர் காக்கும் உயர்சிகிச்சை மருத்துவமனைகளை ஏற்படுத்த வேண்டும்.
நீட் தேர்வை ரத்து செய்க!
ஏழை எளிய மாணவர்களுக்கு எதிரான, சமூக நீதிக்கு எதிரான. பள்ளிக் கல்விமுறைக்கு எதிரான, மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கிற ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்;
போட்டித் தேர்வான PG NEET (மேற்படிப்பிற்கான போட்டித் தேர்வு) தேர்வை, தகுதித் தேர்வான “இறுதியாண்டுத் தேர்வுடன் இணைப்பது” ஒன்றுக்கொன்று முரணானது; மருத்துவ மாணவர் யாருக்கும் பயன் தாராத, குழப்பத்தை ஏற்படுத்துகிற, “நெக்ஸ்ட்” தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்;
10 வருடங்களுக்கு முன்புவரை இருந்தது போல, 85% சதவீத மேற்படிப்பு இடங்களுக்கு அந்தந்த மாநில அரசுகளே நுழைவுத் தேர்வை நடத்தி, அவரவர் மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ‘இட ஒதுக்கீடு அடிப்படையில் மேற்படிப்பு படிக்க அனுமதியளிக்க வேண்டும்;
அகில இந்திய தொகுப்பில் வரும் 15% மேற்படிப்பிற்கான இடங்களுக்கும், மத்திய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் நிறுவனங்களுக்கு மட்டும் அகில இந்திய அளவில் பி.ஜி நுழைவுத் தேர்வு (PG NEET) நடத்த வேண்டும்;
எம்.பி.பி.எஸ் இறுதியாண்டுத் தேர்வில் தற்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் தேர்வு
இதைத்தொடர்ந்து, அமைப்பின் கௌரவ தலைவர்களாக டாக்டர் ரெக்ஸ் சற்குனம், டாக்டர் காமராஜ், டாக்டர் சுந்தரராமன், மதிப்புறுத் தலைவராக டாக்டர் சுப்பையா, செயல் தலைவராக டாக்டர் நேருபாபு, பொதுச்செயலாளராக எஸ்.காசி, பொருளாளராக அமிர்தமணி கணேஷ் மற்றும் 31 பேர் கொண்ட நிர்வாகக்குழு தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.