கோவை, அக்.23- ஏபிடி நிறுவன ஊழியர்களுக்கான போனஸ் உடன்பாடு எட்டப்பட்டது. கோவையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஏபிடி பார்சல் சர்வீஸ் நிறுவனம், தென்னிந்திய முழுவதும் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில், பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு தீபாவளி போனஸ் 10 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்தாண்டு வழங்கியதைப் போலவே 10 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும் என சிஐடியு சார்பில் ஏபிடி நிர்வாகத்துடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. செவ்வாயன்று கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள ஏபிடி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 10 சதவீதம் போனஸ் வழங்க நிர்வாக தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. வரும் 26 ஆம் தேதிக்கு முன்னதாக போனஸ் தொகை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என ஏபிடி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பேச்சுவார்த்தையில் சிஐடியு சார்பில் கௌரவத் தலைவர் எஸ்.ஆறுமுகம், தலைவர் எம்.அருணாச்சலம், பொதுச் செயலாளர் ஆர்.ஆறுமுகம், பொருளாளர் கே.செவந்தியப்பன், துணைப் பொதுச்செயலாளர் ஜெ.ஜெயக்குமார் ஆகியோர் போனஸ் உடன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதேபோல ஏபிடி நிர்வாகத்தின் சார்பில் பொது மேலாளர் சண்முகநாதன், மனிதவள மேலாளர் செல்வராஜ், மேலாளர் பழனிசாமி, சீனியர் மேலாளர் நாராயணன் ஆகியோரும் கையெழுத்திட்டனர்.