கோவையில் பாஜக உட்கட்சி தேர்தலில் போட்டியிடக் கூடாது எனக் கூறி பாஜக நிர்வாகியை அக்கட்சியினரே கடைக்கு புகுந்து தாக்கியதுடன், கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் ராமநாதபுரம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கோவை மாவட்ட பாஜக நெசவாளர் அணியில் செயலாளராக இருந்தவர். மேலும் கடந்த 11 ஆண்டுகளாக ராமநாதபுரம் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி அவரது ஸ்டுடியோவுக்கு வந்த பாஜகவை சேர்ந்த கார்த்திக் மற்றும் முத்துக்குட்டி ஆகிய இருவரும் மேலும் இருவருடன் சேர்ந்து ஜெயக்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த காட்சிகள் ஸ்டூடியோவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதுகுறித்து ஜெயக்குமார் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தான் பாஜகவில் மாவட்ட நெசவாளர் அணி செயலாளராக இருந்ததாலும், தற்போது கட்சியில் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் அதில் எந்த பதவிக்கும் போட்டியிடக்கூடாது என தன்னை மிரட்டுவதாகவும், அதற்காக கார்த்திக் முத்துக்குட்டி மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். எனவே தன்னை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பாஜக உட்கட்சி தேர்தலில் போட்டியிட கூடாது என அவர்கள் கட்சியை சேர்ந்த நபர்களை ஸ்டூடியோ உரிமையாளரை சராமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.