மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏ.வி.சி.கல்லூரி தமிழாய்வுத் துறையின் திண்ணை அமைப்பின் சார்பாக பாரதியார் திறனாய்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடந்தது. தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் சு.தமிழ்வேலு, முன்னிலை வகித்துப் பேசினார். உதவிப் பேராசிரியர் முனைவர் தெ.திருமுருகன் தலைமையுரை வழங்கினார். தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி, தமிழ்த்துறை, இணைப் பேராசிரியர் முனைவர் ச.சுப்புரத்தினம் `வாழ்வியல் அறிஞன் பாரதி’ என்னும் தலைப்பில் பாரதியின் காலச்சூழலில் அவர் செய்த புரட்சி குறித்து பேசினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.சியாமளா ஜகதீஸ்வரி செய்திருந்தார். நிகழ்விற்கு முன்னதாக “பெண்மை நலம் பெறுக என கூத்திடுவோமடா” என்னும் தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு பாரதியின் பெண்ணியச் சிந்தனைக் குறித்து தற்கால நடைமுறையோடு ஒப்பிட்டுப் பேசினர். பேச்சுப் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர்கள் ம.மோ.கீதா, முனைவர் செ.செந்தில்பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.