சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விசைத்தறி தொழிலுக்கு அடுத்தபடியாக விளங்குவது விவசாயம். இப்பகுதியில் 56 ஏக்கர் பரப்பில் காடையாம்பட்டி பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் நீர் நிறைந்தால் சின்ன ஏரி மற்றும் மணல் ஏரிக்கும் செல்லும். இப்பகுதியில் இந்த ஏரி பாசனத்தை நம்பி சுமார் 1000 ஏக்கர் விளைநிலங்கள் இருக்கின்றனர். இந்த பெரிய ஏரிக்கு நீர் வரத்து இல்லாததால் இந்த பகுதி விளை நிலம் முழுவதும் வானம்பார்த்த பூமியாகவே இருந்து வருகிறது. பெரிய ஏரி பகுதிக்கும் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை விரிவுபடுத்தும் போது இந்த பகுதியில் உள்ள விளைநிலங்களிலும் விவசாயம் மேற்கொள்ள முடியும். இந்த கோரிக்கையை நீண்ட நாட்களாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். பெரிய ஏரிக்கு சித்தர்கோவில், அருகே உள்ள ஓடையில் இருந்தும், ஏழுமாத்தானூர், கஞ்சமலை பகுதி ஓடையில் இருந்தும், மழைக்காலங்களில் தண்ணீர் வந்தது. ஆனால், சித்தர்கோவில் பகுதியில், வனத்துறை நிலம் அருகே, தடுப்பணை கட்டியதால், மழைநீர் வருவது பெரியளவில் தடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், ஏழுமாத்தானூரில் தொடங்கும் ஓடையில், பல இடங்களில் ஆக்கிரமிப்பால், ஏரிக்கு மழைநீர் வருவதில்லை என இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பெரிய ஏரி வறண்டு இருப்பதால் இப்பகுதியின் நிலத்தடி நீரும் மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறது. இதனால் காடையாம்பட்டி, பாப்பாப்பட்டி, புளியம்பட்டி, ராசிக்கவுண்டனூர், கே.கே.நகர், கஞ்சமலையனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்திருக்கிறது. குறிப்பாக கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக ஏற்படுகிறது. இதன் காரணமாக குடிநீரை விலை கொடுத்து வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். இதுகுறித்து, நீர் நிலை பாதுகாப்பு ஆர்வலர் ஆர். லட்சுமணன் கூறுகையில், இந்த ஏரிக்கு தண்ணீர் வரத்து ஓடைகள் முழுக்க ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு ஏராளமான கருவேல மரங்கள் உள்ளிட்டு புதர் மண்டியிருக்கிறது. தற்போது இறைச்சி கழிவு, குப்பை கொட்டும் குப்பை கிடங்காக மாறி வருகிறது. . தடுப்பணை கட்டியதால், சித்தர்கோவிலில், ஓடை செல்லும் வழியில், பக்தர்கள் குளிக்கும் ஏழு கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டது. இதனால், ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து, அந்த தண்ணீரை கிணற்றில் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பணையை அகற்ற வேண்டும். நீரோடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரிக்கு நீர் வருவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார். இது தொடர்பாக, 2017 ஆண்டு முதல் அப்போதைய முதல் அமைச்சர், மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை, சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் உட்பட பல்வேறு அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தார். மேட்டூர் உபரி நீர் நிரப்பும் திட்டம் பல ஏரிகளுக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தில், பெரிய ஏரியிலும் தண்ணீர் நிரப்ப, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளை ஒருங்கிணைத்து வரும் ஏ.சீனிவாசன் தெரிவித்தார்.