கோவை, சூலூர் அருகே பின்னலாடை நிறுவனம் நடத்தி வரும் முருகேசன் என்பவர், உயிரிழந்த தனது தங்கை பயின்ற அரசு பள்ளிக்கு அவரது நினைவாக கலையரங்கம் கட்டிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கணபதி பாளையம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயின்ற முருகேசன் என்பவர் மணிமேகலை டெக்ஸ் என்ற பெயரில் பின்னலாடை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதே பள்ளியில் ,இவரது தங்கை மணிமேகலையும் படித்துள்ளார். மணிமேகலை பள்ளியில் சிறந்த மாணவியாக திகழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் எதிர்பாராத விதமாக முருகேசனின் தங்கை மணிமேகலை உயிரிழந்தார். மணிமேகலை படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என முருகேசன் எண்ணியுள்ளார். எதிர்பாராத விதமாக தன் தங்கை மணிமேகலை இறந்த காரணத்தினால் அவர் படித்த அரசு பள்ளிக்கு முருகேசன் பள்ளிக்கு கலையரங்கம் ஒன்றை கட்டிக் கொடுத்து சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கி உள்ளார். இந்த கலையரங்கம் திங்களன்று திறக்கப்பட்டது. இதில் ஊர் பொதுமக்கள் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இது குறித்து பேசிய முருகேசன் இந்த பள்ளியின் முன்னாள் மாணவனாகவும் இந்த பள்ளியில் படித்த என் தங்கையின் நினைவாகவும் கலையரங்கத்தை கட்டிக் கொடுத்துள்ளேன். இதுபோன்று மற்றவர்களும் தாங்கள் படித்த பள்ளிக்கு உதவி செய்ய முன்வந்தால் அரசு பள்ளிகள் மேம்படும் என தெரிவித்தார்.