ஈரோடு, அக்.7- வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். பெருந்துறை வட்டம், பெத்தாம்பாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வரும் குழந்தைசாமி என்பவர், கடைக்குப் பொருள் வாங்க வந்த மாணவரை இழிவான வகையில் சாதியைச் சொல்லி திட்டியதோடு, செருப்பால் அடித்து அவமானப்படுத்தினார். இதுகுறித்த புகாரின் பேரில், குழந்தைசாமி மற்றும் அவரது மனைவி சுமதி ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவரையில் கைது செய்யப்படவில்லை. அதேபோல பெருந்துறை அருகே உள்ள கிராமம் ஒன்றில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை, சாதி ஆதிக்கத்தோடு, சுந்தரேஸ்வரன் என்பவர், கத்தியை காட்டி, மிரட்டி பாலியல் வல்லுறவுக்கு அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரில் கைது செய்யப்பட்டு உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். காவல்துறையின் இத்தகைய செயல்பாடுகளைக் கண்டித்தும், வன்கொடுமைத் தடுப்பு சட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வலியுறுத்தியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் மா.அண்ணாதுரை தலைமையில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.