உதகை, செப்.23- கூடலூர் அருகே ஆண் காட்டுயானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானை தாக்குதலால் உயிரிழப்பு மற்றும் யானைகள் இறப்பு தொடர்கிறது. இந்நிலையில், கூடலூர் பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட முக்கட்டி பகுதியில் உஸ்மான் சரீப் என்பவரது தேயிலை தோட்டத்தில் சுமார் 8 வயது மதிக்கதக்க ஆண் காட்டுயானை பாக்குமரத்தை உடைத்தபோது மின்கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனச்சரகர் ரவி மற்றும் வனவர் பிரவின்சன், பெலிக்ஸ் மற்றும் வனகாப்பாளர் மில்டன்பிரபு மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் முதுலை வன கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. யானை உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.