நாமக்கல், பிப்.9- மல்லசமுத்திரம் சாலையில் பழுதாகி நின்ற அரசு பேருந்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்திலிருந்து மொஞ்சனூர் வழியாக காளிப்பட்டிக்கு 10 ஆம் நம்பர் அரசு பேருந்து சென்றது. காளிப்பட்டியில் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு, மல்லசமுத்திரம் பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, இப்பேருந்து திடீரென பழுதடைந்து நின்றுவிட்டது. இதனால், சேலம் – திருச்செங்கோடு நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து மல்லசமுத்திரம் காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை சரிசெய்து, கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளை மாமுண்டி சாலை வழியாக மாற்றிவிட்டனர். மாற்று பேருந்து மூலமாக பயணிகள் சென்றனர். ஜேசிபி இயந்திரத்தில் கயிற்றை கட்டி பேருந்தை மல்லசமுத்திரம் பேருந்து நிலையத்திற்குள் எடுத்துசென்று பழுதை சரிசெய்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.