districts

img

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் கத்தி முனையில் நகை கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது.

கோவை தொண்டாமுத்தூரில் ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியையிடம் கத்தியைக் காட்டி 25 பவுன் நகை பறித்த வழக்கில் சென்னையில் வைத்து தனிப்படை போலீஸார்  கைது செய்தனர். 

கோவை தொண்டாமுத்தூர் குரும்பபாளையம் டீச்சர்ஸ் காலணியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (70). இவர் ஓய்வு பெற்ற அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர். திருமணம் ஆகாத விஜயலட்சுமி வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த பிப்.27 ஆம் தேதி இரவு விஜயலட்சுமி வீட்டிலிருந்த போது திடீரென பின் வாசல் வழியாக வீட்டிற்கு நுழைந்த மர்ம நபர்கள் இருவர் விஜயலட்சுமியைக் கட்டி வைத்து, கத்தியைக் காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த நகைகள் உட்பட 25 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வீட்டில் பதிவான தடயங்களைச் சேகரித்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் 3 தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்களை போலீஸார் தேடி வந்தனர். 

ஆசிரியையிடம் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்று சென்னையில் பதுங்கியிருந்த மூவரையும் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சார்லஸ் (35), தமிழ்ச்செல்வன் (38), சென்னையைச் சேர்ந்த அருண்குமார் (27). என்பது தெரியவந்தது. கோவை வேடப்பட்டியில் உள்ள உணவகம் ஒன்றில் சார்லஸ் பணியாற்றி வந்த நிலையில், விஜயகுமாரி அடிக்கடி கடையில் உணவு வாங்கி வந்துள்ளார். அப்போது அவர் தனியாக வசித்து வருவதை அறிந்து கொண்ட சார்லஸ், அதே பகுதியில் தங்கி பணியாற்றி வந்த கட்டிடத் தொழிலாளியான தமிழ்ச்செல்வன் என்பவருடன் சேர்ந்து கொள்ளையடித்துள்ளார். இதையடுத்து இவர்கள் இருவர் மீதும் சுமார் 10 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அருண்குமாருடன் ஏற்பட்ட பழக்கத்தை வைத்துக் கொள்ளையடித்த நகைகளை விற்க முயன்றுள்ளனர்.

மேலும் கொள்ளையடித்து விட்டு சென்னை சென்ற 3 பேரும் அங்கேயே அறை எடுத்துப் பதுங்கியிருந்த நிலையில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து மூவரையும் கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.