districts

ரூ.17.71 கோடி மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு பணிகள்

சேலம், ஜூன் 27- சேலம் மாநகரில் பல்வேறு இடர்பாடுகளால் சேதமடைந்த 53 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலைகள் ரூ.17 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாநகராட்சி உள்ள 60 வார்டுகளில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சேலத்தை பொறுத்தமட்டில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட சாலையே இன்றும் பயன்பாட்டில் உள்ளது. ஏற்கனவே இருக்கும் சாலைகளை வணிக நிறுவனங்கள், சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். அம்மாப்பேட்டை, குகை, வின்சென்ட், தாதகாப்பட்டி, பொன்னம்மாப்பேட்டை, 5 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை போக்க ஓமலூர் சாலை, சாரதா கல்லூரி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த மேம்பாலம் அமைத்த பிறகும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. இந்நிலையில், மாநகராட்சி பகுதிக்கு மேட்டூரில் குடிநீர் எடுத்து விநியோகம் செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு ஆத்தூர் பகுதி மக்கள் மேட்டூர் குடிநீர் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் சேலத்திலிருந்து ஆத்தூர் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் கொண்டு வரப்பட்ட பின், சேலம் மாநகராட்சி பகுதியில் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டில் சேலம் - மேட்டூர் தனிக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் ரூ.285 கோடியில் உருவாக்கப்பட்டது. இதற்காக சேலம் மாநகர் மற்றும் புறநகரில் பல்வேறு இடங்களில் குழித்தோண்டி குழாய் பதிக்கப்பட்டது. இதனால் பல கிலோமீட்டர் தூரம் சாலைகள் தேசமடைந்தன. அதன்பின், சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

இத்திட்டத்திற்கு சேலம் மாநகரில் உள்ள 95 சதவிகிதம் சாலைகளில் குழாய் பதிப்பதற்காக குழித்தோண்டப்பட்டது. இதை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கிடப்பில் போட்டது. இவ்வாறு குழித்தோண்டப்பட்ட இடங்களில் இன்னும் பல சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்தை தினசரி வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், தனி குடிநீர் திட்ட குழாய், இயற்கை இடர்பாடுகளால் சேதமடைந்த சாலைகள், மழைநீர் வடிகால் பணி மற்றும் சிறுபாலம் அமைக்க 21 சிப்பங்கள் உள்ளிடக்கிய 368 பணிகள் 53 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.17 கோடியே 71 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. திட்ட அறிக்கையின் மீது உரிய நிர்வாக அனுமதி வழங்கக்கோரி, கடந்த மே மாதம் நகராட்சி நிர்வாக இயக்குநகரம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதற்கான தீர்மானம் திங்களன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கப்படும், என்றனர்.