districts

img

கும்பகோணம் மாமன்ற 34-வது வார்டு உறுப்பினராக சிபிஎம் வேட்பாளர் ஏ.செல்வம் போட்டி

கும்பகோணம், பிப்.2- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற 34-வது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு ஏ.செல்வம் போட்டியிடுகிறார். இவர் 1989 ஆம் ஆண்டு கேரளாவில் தொழில் நிமித்தமாக சென்றபோது அங்கு உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறைகளையும் மக்களுக்கான ஆட்சி போராட்டங்களையும் ஏற்றுக்கொண்டு கும்பகோணம் தாராசுரம் பகுதியில் 1992 இல் வாலிபர் சங்கத்தில் இணைந்தார். பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் நகர செயலாளராகவும், கும்பகோணம் பகுதி தாராசுரம் பேரூராட்சி பகுதியில் பல்வேறு மக்கள் போராட்டங்களையும் முன்னெடுத்து செய்தார். கும்பகோணம் பகுதியில் எவர்சில்வர் தொழிலாளர் சங்கத்தின் சிஐடியு மாவட்ட தலைவராக தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுத் தருவதில் பங்கெடுத்து வருகிறார். இவர் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் மாநகர குழுவிலும் உறுப்பினராக உள்ளார். இவரது மனைவி சுமதி மாதர் சங்கத்தின் மாநகர பொறுப்பாளராகவும், தாராசுரம் தேர்வுநிலை பேரூராட்சியில் 13-வது வார்டு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மகன் ரஞ்சித் வாலிபர் சங்க பொறுப்பாளராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கும்பகோணம் மாநகராட்சியின் தாராசுரம் பகுதி 34-வது வார்டில் போட்டியிடும்  ஏ.செல்வம், கடந்த அதிமுக ஆட்சியில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சிபிஎம் சார்பில் மக்கள் போராட்டங்களை முன்னின்று நடத்தியபோது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டவர் ஆவார்.  தற்போது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கும்பகோணம் மாநகராட்சி 34-வது வார்டு வேட்பாளராக  அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனு வெள்ளிக்கிழமை கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்யப்படுகிறது