districts

மண்வள அட்டையின்படி உரமிட்டு அதிக மகசூல் பெற அறிவுறுத்தல்

கும்பகோணம், பிப்.2 - அதிக மகசூல் பெற மண்வள அட்டையின்படி உரம் இடுவது அவசியம். இதற்கு ஆடுதுறை மண் பரிசோதனை நிலையத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேளாண்மை இயக்குனர் கவிதா தெரிவித்துள்ளார்.  மேலும் வேளாண்மை இயக்குனர் கவிதா கூறுகையில், பயிர் வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகளாக மண் வளமும், நீர் வளமும் உள்ளது. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் கலைக்கொல்லி மருந்துகளை தொடர்ந்து அதிகமான அளவில் உபயோகிப்பதால் மண்ணின் வளம் மற்றும் விவசாய உற்பத்தி பாதிக்கப்படுவதோடு விவசாய இடுபொருட்களின் செலவினம் அதிகமாகிறது. எனவே மண்ணின் வளத்தை பாதுகாக்கவும், அதனை மேம்படுத்தி சீர்செய்யவும், இடுபொருட்கள் செலவினத்தை குறைக்கவும் மண் பரிசோதனை மிகவும் அவசியமாகும். மண் பரிசோதனை செய்வதன் மூலம், மண்ணின் தன்மை மற்றும் மண்ணில் உள்ள பேரூட்ட, நுண்ணூட்ட ஊட்டச்சத்துகளின் குறைபாடுகளை அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு ஊட்டச்சத்து குறைபாடுகளை அறிந்து அதற்கேற்ப உரமிடுவதன் மூலம் அதிகப்படியான உரத் தேவையினை குறைக்கலாம்.

களர், உவர் மற்றும் அமில நிலங்களை கண்டறிந்து அவற்றை சீர்திருத்தம் செய்யவும், பயிருக்கு ஏற்ப சமச்சீர் உர பரிந்துரை வழங்கவும் மண் பரிசோதனை மிகவும் அவசியமாகிறது. தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் மண் பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மண் மற்றும் தண்ணீர் மாதிரிகள் விவசாய பயன்பாட்டிற்கு மட்டும் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கான ஆய்வு முடிவுகள் மண்வள அட்டை வடிவில் வழங்கப்படுகின்றன. எனவே விவசாயிகள் மண் ஆய்வு செய்து மண்வள அட்டையின் பரிந்துரையின்படி உரமிட்டு, ரசாயன உரத்தேவையினை குறைத்து திட மற்றும் திரவ உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட கலவைகளை பயன்படுத்தி மண் வளம் காத்து அதிக மகசூல் பெற வேண்டும் என்றார். மேலும், விவசாயிகளுக்கு தேவைப்படும் உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டக் கலவைகள் மானிய விலையில் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் வழங்கப்படுகிறது என்றார்.