districts

img

யானையை சுட்டுக் கொன்ற விவசாயி கைது!

ஓசூர் அருகே காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே ஜவளகிரி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பனைமரம் மேற்கு காப்புக்காட்டில் 35 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை இறந்து கிடந்தது.
இதனையடுத்து கால்நடை மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்ததில் யானை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஜவளகிரி அருகே உள்ள திம்மன் தொட்டிகிராமத்தை சேர்ந்த விவசாயி மாரப்பன்(50) என்பவர் நாட்டுத்துப்பாக்கியால் காட்டுயானையை சுட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பட்டியில் வளர்த்து வரும் மாடுகளை யானை தாக்க வந்ததால், துப்பாக்கியால் சுட்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மாரப்பனிடம் இருந்த உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்ததோடு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.